
மதுபானக் கடைகளில் மது விலையை 5 முதல் 50 ரூபாய் வரை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அரசின் உயர்மட்டக்குழு ஆலோசனைக்குப் பிறகு மாநிலம் முழுவதிலுமுள்ள மதுபானக்கடைகளில் இந்த விலையேற்றம் அமலுக்கு வரவுள்ளது.
தமிழகம் முழுவதும் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட மாநில வருவாய் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு மதுபானங்களுக்கான கலால் வரியை உயர்த்துவதன் மூலம் மதுபாட்டில்கள் விலை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.80 வரை மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்தமுறை ரூ.5 - ரூ.50 வரை உயர்த்தப்படலாம் எனக் குறிப்பிட்டார்.
ரம், விஸ்கி, பிராந்தி (180 மி.லி.) ஆகியவற்றிற்கு ரூ.5 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று 373 மி.லி.க்கு ரூ.10, 750 மி.லி.க்கு ரூ.20 வரை உயர்த்தப்படலாம். இதேபோன்று பீர் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தவும், மீடியம் மற்றும் பிரீமியம் வகைகளுக்கு முறையே ரூ.10 முதல் ரூ.50 வரை உயத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் அமலுக்கு வந்தால் (180 மி.லி) ரூ.120 மதிப்புடைய பாட்டில் ரூ.125க்கு விற்பனை செய்யப்படும். மீடியம் மற்றும் பிரீமியம் வகை மதுபானங்களின் விலை ரூ. 10 முதல் ரூ.20 வரை உயர்ந்து ரூ.140 - ரூ.250 வரை விற்கப்படலாம்.
இந்த விலையேற்றத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைக்கும். 2022 - 2023ல் கடந்த நிதியாண்டில் மதுவிற்பனையால் அரசுக்கு ரூ.45,000 கோடி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.