கம்பம்: கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்கிறது, அதனால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 1,708 கன அடி தண்ணீர் வந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 120.25 அடி உயரமாக இருந்தது, திங்கள்கிழமை 2592.50 கன அடி தண்ணீர் வந்ததால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்தது.
மின்சார உற்பத்தி அதிகரிப்பு
அணைக்குள் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தமிழக பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை 400 கன அடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை 933 கன அடியாக வெளியேற்றப்பட்டது. அதாவது ஒரே நாளில் 533 கன அடி தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாக லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது, திங்கள்கிழமை 83 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருவதாலும், தமிழக பகுதிக்கு தண்ணீர் அதிக அளவு வெளியேற்றம் இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை!