தனது வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணேசன் நேற்று நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு தனது கோட்டாக் மகேந்திரா வங்கி மூலம் ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளர் எந்த விளக்கமும் கூறாமல், கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கியின் இருப்பு நிலையை எடுத்து பார்த்துள்ளார். ஆனால் அதில் 756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளில் இதுபோன்று அண்மையில் அதிகமான குளறுபடிகள் நடப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். வங்கிகளில் நடக்கும் இந்த குளறுபடிக்குக் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன.
ஏற்கனவே, சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் இப்படி ஒரு குளறுபடி நேரிட்டது குறிப்பிடத்தக்கது.