நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக். 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது.
பயணிகள் இல்லாமல் கப்பலை இயக்கும் கேப்டன் பிஜு பி. ஜார்ச் தலைமையில் 14 ஊழியர்கள் சோதனை ஓட்டத்தில் கப்பலில் பயணம் செய்தனர். 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் கப்பல், மீண்டும் இன்று மாலை நாகை துறைமுகம் வந்துசேரும்.
பின்னர், இதேபோல நாளை காலையும் சோதனை ஓட்டம் நடைபெறுவதைத் தொடர்ந்து, அதிகாரபூர்வமாக நாளை மறுநாள் (அக்.10) பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 7670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட், மற்றும் விசாவுடன் நாகை துறைமுகத்தின் உள்ளே அமைந்துள்ள பயணிகள் முனையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: நெல் வயலுக்கு பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு!
இதுவரை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்வதற்கு 10 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.