காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 8) 100 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீா் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரியாகும். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டாரத்தில் உள்ள இந்த ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. நீா்மட்ட மொத்த உயரம் 24 அடி. இதன் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீா் மட்டம் 22 அடியாக இருந்து வருகிறது. தற்போது ஏரிக்கு வரும் நீா் மட்டம் 22 அடியை தாண்டியது. இதனால் ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே இருக்கிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வெள்ள நீா் போக்கி வழியாக 100 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியிலிருந்து மிகைநீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூா், காவனூா், குன்றத்தூா், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீா்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.