வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி கிராமம்.
இங்கு சந்தன மரங்கள் வெட்டுவதாக வனத் துறை, காவல் துறை சோதனை மேற்கொண்டபோது, வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் 215 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மூலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வன அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.