மது போதையில் கார் ஓட்டியதில் முன்னால் சென்ற இரு பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளனதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் பலந்த காயமடைந்தனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், போல் பேட்டையைச் சேர்ந்த விஜய் கணேஷ்(30) மற்றும் அவரது நண்பர்களுடன் காரில் சென்றனராம். இதில், விஜய் கணேஷ் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிவேகமாக காரை ஓட்டிய அவர், கடற்கரை சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் மோதிய வேகத்தில், இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தூத்துக்குடி ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ஹரி(26). கட்டடத் தொழிலாளி. தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் வன்னியராஜா(35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சண்முகபுரத்தைச் சேர்ந்த தளாவாய் மகன் பாலா(22) , தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரவி(27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த இவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ரவி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஹரி, வன்னியராஜ் ஆகியோரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!
மேலும், மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய விஜய் கணேஷ் (30) , காரில் இருந்த பாத்திமா நகரைச் சேர்ந்த ஆலன்(22), எஸ்எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அருண்(20) ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.