பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க கடந்த நான்கு நாட்களாக தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு வனப்பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவர் பாணி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்தும், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதையும் படிக்க | சா்வதேச தகுதியைப் பெறும் எழும்பூா் ரயில் நிலையம்
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக பரிசல்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலுமாக குறைந்துள்ளதால், பரிசல்துறை வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.