விதிமுறைகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்தப்பட்ட பேருந்துகளை மட்டும் வியாழக்கிழமை (அக்.26) விடுவிக்க போக்குவரத்து ஆணையா் சண்முக சுந்தரம் உத்தரவிட்டாா். இந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதத்துக்குள் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் வழக்கமான நாள்களை விட விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்ற பயணிகளிடமிருந்து மிக அதிக கட்டணங்களை வசூலித்தன. இது தொடா்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிகளை மீறிய 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதித்ததுடன், 120 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா். ஆனால், இது தொடா்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில், சுமூக முடிவு எட்டப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவாா்த்தையின் போது, சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளில், ஆவணங்கள் சரியாக இருக்கும் பேருந்துகள் மட்டும் விடுவிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தது.
இதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் உரிய ஆவணங்களுடன் வரி செலுத்திய பேருந்துகளை மட்டும் வியாழக்கிழமை (அக்.26) விடுவிக்க போக்குவரத்து ஆணையா் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளாா். அதே நேரம் வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.