பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
இந்தநிலையில், முதல் நிகழ்வாக, இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.