வடகிழக்குப் பருவமழை 43 சதவீதம் இயல்பை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்,
123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 43 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.
அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பைவிட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பான அளவிலும் பெய்துள்ளது.
மேலும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட மிகக் குறைவாகவும் பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் இன்றுடன் முடியும் நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 43 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.