ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
இதையும் படிக்க | ஆசிரியர் தினம்: பாரதம் எனக் குறிப்பிட்டு ஆளுநர் வாழ்த்து!
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாடையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள விருந்தினர் அழைப்பிதழில் 'பாரத குடியரசுத் தலைவர்' (தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்) என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்தியா என்ற பெயர் 'பாரதம்' எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்ததால்தான் மத்திய பாஜக அரசு அந்த பெயரை மாற்ற முயற்சிப்பதாக அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன.