கம்பம்: தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மறியல் போராடத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டின் நிலவி வரும் வேலையின்மை திண்டாட்டம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நாடு முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம், கம்பம் நகரில் காமன்திடல் முன்பு ஒன்றுகூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், மாதர்சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 250- க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக காந்தி சிலை, அரசமரம், சிக்னல், ஏ.கே.ஜி.திடல், தேவர் சிலை வழியாக பாரத ஸ்டேட் வங்கி முன்பு சென்று சாலையில் அமர்ந்தனர்.
இதையும் படிக்க | வேளாங்கண்ணி பெரிய தோ் பவனி: காலை முதலே குவிந்து வரும் பக்தர்கள்!
மாவட்ட குழு உறுப்பினர் கே.ஆர்.லெனின் தலைமையில், சிஐடியு மாவட்ட செயலாளர் வி.மோகன், சு.பன்னீர்வேலு ஆகியோர் முன்னிலையில் மத்திய அரசின் விலைவாசி உயர்வு, புதிய போக்குவரத்து சட்டம், நகர் மற்றும் பேரூர் பகுதிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை அதிகரித்தல் போன்றவைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர், அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோன்று கூடலூரில் சிபிஎம் கட்சி நகர செயலாளர் ஜெயராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பாஜக அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
கூடலூர் காவல் ஆய்வாளர் எம்.பிச்சைப்பாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.