நாகர்கோவில்: ஆவணி மாத 4ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் நாக தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. நாக தோஷம் , கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷம் உள்ளவர்களும், நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களும் இந்த கோயிலில் உள்ள நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோயிலில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகரை வழிபாடு செய்வார்கள். செப்.10 ஆம் தேதி ஆவணி 4 ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நாகராஜாவை தரிசிக்க காலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை தரிசித்தனர்.
மேலும், பக்தர்கள் கோயிலின் முன்புறமுள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க: வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா
கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.