மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள நான் இந்த நேரத்தில் பலியாடு ஆகிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடக்கவிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், செப்.10 மாலை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மறக்காது நெஞ்சம்.. ஏ.ஆர்.ரஹ்மானை விளாசும் ரசிகர்கள்.. என்ன ஆனது?
அதன்படி, நேற்று(ஞாயிறு) சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூருக்கு அருகே ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள், சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பலருக்கும் இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியுள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனம் எழுப்பிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய நிகழ்வுக்கு முழு பொறுப்பையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்பான சென்னை மக்களே, இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு அசாதாரண சூழ்நிலையால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் arr4chennai@btos.in என்ற மெயிலுக்கு உங்கள் டிக்கெட்டின் நகலை குறைகளுடன் பகிருங்கள். எங்கள் குழு விரைவில் உங்களுக்கு பதில் அளிக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap@BToSproductions @actcevents — A.R.Rahman (@arrahman) September 11, 2023
தொடர்ந்து இன்ஸ்டாவிலும் இதனைப் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான் மேலும், 'சிலர் என்னை G.O.A.T(greatest of all time) என்று அழைக்கிறார்கள். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள இந்த நேரத்தில் நானே பலியாடு ஆகிறேன். சென்னையில் கலைகள் மேம்பட, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சுற்றுலா வளர்ச்சி, கூட்ட நெரிசல் மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, விதிகளைப் பின்பற்றும் பார்வையாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஆகியவை வழங்கப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.