திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்ததாரர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள ராமச்சந்திரனின் உறவினரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினம் வீடு, அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள ரத்தினத்தின் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய அதிரடி படை காவல் துறையினரின் துணையுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் எம்ஜிஆர் காலனி அடுத்துள்ள ஹனிபா நகரில் அமைந்துள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீட்டிலும் அமலாக்க துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
ரத்தினத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.