சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கலை முதல் சோதனை செய்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்தது.
தற்போது அனல் மின் நிலையத்தில் 850 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 7:30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் இவர்கள் இங்குள்ள ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் அலுவலகத்திற்குள் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சென்னையில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
மின் சாதன பொருள்கள் வாங்கியதில் வருமானவரி ஏற்பு செய்ததாகவும், ஒப்பந்த பணியாளர்களை பணி அமர்த்தியதிலும் ஊதியம் வழங்குவதிலும் பெரும் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக அனல் மின் நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.