சேலம்: எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள அரசு கல்வியில் கல்லூரிக்கு சொந்தமான கட்டடத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம், எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஈரோட்டில் வசிக்கும் குணால் என்ற 21- வயது இளைஞர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், எடப்பாடி எட்டிக்குட்டைமேடு அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று மாலை வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள அரசு கல்வியல் கல்லூரி வளாகத்தின் முன்பு நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியதாகவும், மீண்டும் பாட்டி வீட்டுக்கு வரவில்லை என்றும் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் குணாலின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்தனர்.
இதற்கிடையே, கல்லூரியின் மேல்மாடியில் பெற்றோர்கள் ஏறிப் பார்த்தபோது குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குணாலின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].