காஞ்சிபுரம்: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பெருமாளை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தேவராஜ சுவாமி திருக்கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவித்து வருகின்றனர்.
அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்து நடை திறக்கப்பட்டது.
காலை நேரத்திலேயே அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதை தொடர்ந்து, நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து, பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையே சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் கோவில் வளாகமே களைகட்ட துவங்கி உள்ளது.