நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திருப்பூரில் தொண்டர்களை பார்க்கும்போது களைப்பு நீங்கி உற்சாகமான மனநிலையோடு இருக்கிறேன்.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் சந்தித்துக் கொண்ட ஊர்தான் திருப்பூர்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை. வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எந்த கனவுடன் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார் என்று தெரியவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கொச்சி சென்று தில்லி சென்றதன் பின்னணி என்ன? அதிமுகவும் பாஜகவும் சண்டை போடுவது போன்று நடிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.