மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | மிக்ஜம் புயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நான்காவது நாளாக நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநாள்(டிச. 7, 8) நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டிச. 7, 8 தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் முறையே டிச. 14, 20 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை