தெய்வமகளுக்குப் பிறகு சீதாராமன் சீரியலில் சவாலான முயற்சி!
தெய்வமகள் தொடருக்குப் பிறகு சீதா ராமன் தொடரில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
தெய்வமகள் தொடரில் இரட்டை வேடத்தில் ரேகாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சின்னத்திரை தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சொற்பமாகவே கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் அது, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் நாயகிக்கு மட்டுமே இருக்கும்.
ஆனால், தெய்வமகள் தொடரிலும் சரி, தற்போது சீதா ராமன் தொடரிலும் சரி துணைப் பாத்திரத்தில் நடிக்கும் ரேகாவுக்கு இரட்டை வேடம் கிடைத்துள்ளது. இது ரேகா கிருஷ்ணப்பாவின் நடிப்பு திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
படிக்க | புற்றுநோய் மையத்தில் சீரியல் நடிகை!
இதனால், சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் குமரன் இயக்கத்தில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மிகப்பெரிய வெற்றித்தொடர். இதில் நடித்த நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவின் நாயகியக வலம் வருகிறார். அந்தத் தொடரில் நடிகை ரேகா கிருஷ்ணப்பா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீதாராமன் தொடரில் ரேகாவுக்கு இரட்டை வேடம் கிடைத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சீதா ராமன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஸ்ரீ பிரியங்கா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா.