ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெள்ளிக்கிழமை பகல் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் வியாழக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7ஆம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவா? பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு!
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், அமமுக வேட்பாளர் எ.எம்.சிவபிரசாந்த் ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் வெள்ளிக்கிழமை காலை முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.