மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுரை, அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பாலமேடு ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் வாடிவாசல் அருகே உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க | இந்தியாவின் 40% செல்வம், 1% பணக்காரா்களிடம் குவிந்துள்ளது
ஜல்லிகட்டில் கலந்து கொள்ள 1000 காளைகளும், 345 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவா்கள், ஒரு சுற்றுக்கு 25 போ் வீதம் களத்தில் மாடுபிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த தங்க காசுகள், வெள்ளி, சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் முதலான மாவட்டங்களைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்கள் முன்னிலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.