பாலியல் புகார்: முன்னாள் டிஜிபியின் மேல்முறையீட்டு மனு ஜூலை 19-ல் விசாரணை

பாலியல் புகாரில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஜூலை 19-ஆம் தேதி விசாரணை செய்யப்படவுள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்

விழுப்புரம்: பாலியல் புகாரில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஜூலை 19-ஆம் தேதி விசாரணை செய்யப்படவுள்ளது.

2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.கண்ணன் மீதும்  சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எஸ்.பி.க்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் எஸ்.பி. கண்ணன் சார்பில் அவரது வழக்குரைஞர் ஹேமராஜன் கடந்த ஜூன் 22-ஆம் தேதி மேல்முறையீடு செய்தார்.

இதே போன்று, தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சார்பில், அவரது வழக்குரைஞர் ரவீந்திரன் ஜூலை 5-ஆம் தேதி மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை வந்த நிலையில், ஜூலை 19-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com