அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகார மிரட்டல்களுக்கு தானே, தனது கட்சியினரோ ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்


சென்னை: அதிகார மிரட்டல்களுக்கு தானே, தனது கட்சியினரோ ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்! என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா கருணாநிதி! அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது கலைஞரின் நூற்றாண்டு.

சென்னை கிண்டியில் 4.89 ஏக்கர் பரப்பளவில், 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2022 மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 6 தளங்களும் 1000 படுக்கைகளும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை 2023 ஜூன் 15-ஆம் நாள் மருத்துவர்கள் - செவிலியர்களுடன் இணைந்து உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன்.  இந்த மருத்துவமனை. 15 மாதங்களில் இந்த மகத்தான சாதனையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது நமது 'திராவிட மாடல்' அரசு.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். இந்த முனைப்புடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பன்முக ஆற்றல் கொண்ட கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாட அமைச்சா்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்களின் பங்கேற்புடனும் ஆலோசனைகளுடனும் நூற்றாண்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், கருணாநிதி பிறந்த இடமான திருவாரூா் மாவட்டம்  காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில்  கலைஞா் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் வள்ளுவா் கோட்டத்தைப் போலவே, திருவாரூரில் கலைஞா் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாரூா் தோ் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது உருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தைவும், என் தாத்தாவுமான முத்துவேலரின் பெயரில் நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியனவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பணிகளை எதிலும் வல்லவர் என்று நான் பாராட்டிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு நிறைவேற்றிக் காட்டியுள்ளாா். திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் விழா ஏற்பாடுகளை அருமையான வகையில் கவனித்து வருகிறார்.

கருணாநிதி நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையிலே, கோவையிலும் கருணாநிதி புகழ் போற்றி, கழகத்தின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது. கருணாநிதிக்கு நமக்கு ஊட்டியுள்ள லட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை உடன்பிறப்புகளாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி.

குறுக்கே வரும் தடைகளைத் தகா்த்து நம் பயணம் தொடா்கிறது. வெற்றிகரமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கும். தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர் என்று என்று தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,  கருணாநிதி  திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  

கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com