
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சானூப்பட்டி மேம்பாலத்தில் சரிந்து விழுந்துள்ள பக்கவாட்டு சுவர்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை காலை சரிந்து விழுந்தது.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப்பாக உள்ளது.
இந்நிலையில், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் சரிந்து விழுந்தது.
தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, இரு புறமும் உள்ள அணுகு சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
திருச்சி என்ஐடியிலிருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு, அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
சாலை மறியல்:
இதனிடையே, மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சரிந்து விழுந்துள்ளதைக் கண்டித்தும், இதை விரைவாக சீரமைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காலை 9 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...