செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் செய்ய முடியுமா என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் அரசு பள்ளியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.
சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் நடைபெற்று வருகிறது. கடலூரில் 4 இடங்கள், கிருஷ்ணகிரியில் இரண்டு இடங்கள், ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அமைப்புகளோடு இந்த சிறப்பு முகம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயன்பெறுவார்கள். இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இசிஜி, முழு ரத்த பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மனநல மருத்துவ ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
64 ஆண்டுகளுக்கு முன்னாலே கலைஞர் அவர்கள் இந்த மாதிரியான மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். வருமுன் காப்போம் திட்டம் கடந்த 10 ஆண்டுகள் முன்பு சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த மருத்துவ முகாமினை தொடங்கி நடத்திக் கொண்டு வருகிறோம்.
108 ஆம்புலன்ஸ் சேவையானது கலைஞர் அவர்கள் கொண்டு வந்தது தான். இந்த முகாமில் இன்று 67 மருத்துவர்கள் பங்கேற்று உள்ளனர். ஆண்டுதோறும் ஒன்றியங்களில் 1050 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருந்தும் ஆனால் ஆண்டு தோறும் கூடுதலாகவே நடத்தி இருக்கிறோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவரின் கண்கானிப்பில் உள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு சிறப்பாக அறுவை சிகிச்சை முடிந்து இருக்கிறது. தற்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவின் கண்காணிக்கப்பட்டு வருகிறார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முறையில் வெளிப்படுத்தன்மையில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதய அறுவை சிகிச்சையினை 25 ஆயிரம் பேர் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் செய்ய முடியுமா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.