பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வரும் நன்றியினை தெரிவித்துக்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுபோல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், 70-வது பிறந்தநாள் காணும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கான புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு