சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் யாகசாலை அமைப்பதற்கான பந்த்கால் முகூர்த்தத்தை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலை மீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகிறார். இக்கோவிலில் சிவபெருமான் லிங்கம், மூர்த்தம், சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தளமாக கோவில் போற்றப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது வரும் மே 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்திட தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தல்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களால் செய்யப்பட்டு மேல தாளங்கள் முழங்க பந்தக்கால் கோயிலை வலம் வந்து எடுத்துவரப்பட்டது.
இதையும் படிக்க | தமிழகத்தில் திடீர் மழை ஏன்? பாலச்சந்திரன் விளக்கம்!
பின்னர், நவகிரக சன்னதி அருகே பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேல கோபுர வாசல் அருகே யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் தர்மபுரம் ஆதீனம் முன்னிலையில் நடப்பட்டது.
பின்னர், கோயில் கோபுர கலசங்களுக்கு வர்ணம் பூசுவதற்கான இயந்திர செயல்பாட்டையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
முன்னதாக முத்து சட்டை நாதர் சுவாமிக்கு புதிதாக அமைக்கப்படும் கருங்கல் மண்டபத்திற்கு கருங்கல் நிலை வைப்பதற்கான சிறப்பு பூஜையையும் தருமபுரம் ஆதீனம் செய்து நிலைப்படி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில், திருப்பணி உபயதாரர்கள் மகாலட்சுமி அம்மையார், மார்கோனி, முரளி, கிருஷ்ணன் மற்றும் திரளான உபயதாரர்கள் பங்கேற்றனர்.