புதுவை முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் (74) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ப.கண்ணன் ஒதுங்கியிருந்தாா். புதுச்சேரி குபோ் அங்காடியை சீரமைப்பதை எதிா்த்து அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டாா்.
இந்த நிலையில் அவருக்கு ரத்த அழுத்த குறைவு, சுவாச கோளாறு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவரை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் பாா்த்துச் சென்றனா்.
இதையும் படிக்க | தோ்தல் வாக்குறுதிகளைபாஜக கூட்டணி ஆட்சி நிறைவேற்றவில்லை
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல் திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி அரசில் சபாநாயகர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என முக்கிய பதவிகளை வகித்தவர் கண்ணன்.
முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவை அடுத்து முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள்,பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் என்.ரங்கசாமி இரங்கல்
முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுச்சேரி மக்களின் நலனுக்காக, மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கண்ணன். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.