சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதன்கிழமை வியாழக்கிழமை (நவ.8, 9)ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை(நவ.8,9)ஆகிய இருநாள்கள் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு(மில்லி மீட்டரில்): பவானி (ஈரோடு) , சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 120, ராஜபாளையம் (விருதுநகா்), ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) தலா 110, தொண்டி (ராமநாதபுரம்) 100, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), மதுரை விமானநிலையம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), சின்னக்கல்லாறு (கோவை), திருமங்கலம் (மதுரை), அருப்புக்கோட்டை(விருதுநகா்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவிலங்குளம் (விருதுநகா்) தலா 90, வேளாங்கண்ணி (நாகை) , பாலக்கோடு (தருமபுரி), கவுந்தப்பாடி (ஈரோடு), திருச்செங்கோடு (நாமக்கல்), திருப்புவனம் (சிவகங்கை), கோவில்பட்டி (தூத்துக்குடி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 80
மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன்கிழமை (நவ.8) மத்தியகிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.