
அரக்கோணம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மேலும் மூன்று நாள்களுக்கு மிக கனமழை செய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீட்புப்பணிக்காக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் மூன்று நாள்களுக்கு தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கையாக மீட்புப்பணிக்காக படையினரை அனுப்புமாறு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படைத் தளத்திற்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்று தேசிய பேரிடர் மீட்புப்படையின் தலா 25 பேரைக் கொண்ட 5 குழுக்கள் துணை கமாண்டண்ட்டுகள் சங்கரபாண்டியன், சுதாகர் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றன. இதில் ஓரு குழு சென்னை மாவட்டம் அடையாறு, இந்திராநகர் பகுதிக்கும், இரண்டு குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், இரண்டு குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.
இக்குழுவினர் தங்களுடன் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், மிக நீளமான கயிறுகள், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி சாதனங்கள் ஆகியவற்றுடன் சென்றுள்ளனர்.
மேலும் தமிழக அரசு எந்நேரம் அழைத்தாலும் புறப்படுவதற்காக பல குழுக்கள் படைத் தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கண்காணிக்க தேசிய பேரிடர் படை தமிழக அரசுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளது எனவும் இதற்காக படைத் தளத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும் படைத்தள தலைமை அலுவலர் கமாண்டண்ட் அகிலேஷ் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.