திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்


சென்னை: வேலூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அச்சாரமிடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

ஒரு மாநிலக் கட்சி முக்கால் நூற்றாண்டு காலம் தன் மக்களின் நலன் காக்க உறுதியாகப் போராடியும், இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியும், இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை வகுத்தும், சட்டங்களை உருவாக்கியும் இன்று இந்தியாவை வழிநடத்தக்கூடிய வகையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றும் திகழ்கிறது என்றால் அந்தப் பெருமை நம் உயிராகவும், உதிரமாகவும் திகழ்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உரியது. இந்த வரலாற்றுப் பெருமையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் அளப்பரியது.

திமுக தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற வகையிலும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலைவர்களால் வரவேற்கப்பட்டேன். ஜனநாயக விரோத - மக்கள் விரோத மத்திய பாஜக அரசை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்று இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கியபோது ஏளனம் பேசினார்கள். ‘இது ஃபோட்டோ செஷன்’ என்று நகையாடினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. நகையாடியவர்களின் கண்களில் பயம் ஏற்பட்டுள்ளதை பெங்களூரு நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது. அதன் பிறகு, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டபோது, பாஜக அரசின் பயத்தின் விளைவாக சமையல் எரிவாயு உருளையின் விலைக் குறைப்பு நாடகம் அம்பலப்பட்டுள்ளது.

10 ஆண்டு காலமாக இந்தியாவை மதத்தின் பெயரால் பாஜக பாழ்படுத்தி வருகிறது. அவரவா் தாய்மொழியையும் மாநில உரிமைகளையும் நசுக்கியது. பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு உணா்வுகளை ஒடுக்கியது. தற்போது, ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தோ்தல் - ஒரே உணவு என்ற சா்வாதிகாரத்தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இதற்கு எதிராக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிற வாக்காளா்களும்தாம்.

இந்த ஒற்றுமை உணர்வை ஒருமுகப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதால் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர். இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாகத் திகழ்கிறது திமுக எனும் பேரியக்கம்.

பெரியார் – அண்ணா - கழகம் பிறந்த செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவினைச் சிறப்பாக நடத்தி, கொள்கை முழக்கம் செய்யும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், கழகத்திற்காகப் பாடுபட்ட லட்சிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி, சிறப்புரை ஆற்றுவது கருணாநிதி உருவாக்கிய நடைமுறை - நன்முறை. 

கருணாநிதி வழியில் இந்த ஆண்டும் கழகம் காத்த லட்சிய வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருது மயிலாடுதுறை சத்தியசீலன், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரம், கலைஞர் விருது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் - அமைச்சர் ஐ.பெரியசாமி, பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவன், பேராசிரியர் விருது பெங்களூரு ந.இராமசாமிக்கும் செப்டம்பர் 17 இல் தீரமிக்க வேலூர் மாநகரில் நடைபெறவுள்ள கழகத்தின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் வழங்கப்படும். கழகத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுக்கான விருதுகளும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.

வீரம் செறிந்த வேலூரின் அடையாளமாக கோட்டை இருப்பதுடன், வேலூர் எப்போதும் திமுகழகத்தின் கோட்டைதான் என்பதைப் பல்வேறு களங்களில் நிரூபித்திருக்கிறது.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்கமும், கழகத்தின் பவள விழா தொடக்கமும் இணைந்த இந்த ஆண்டில், வேலூரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவிற்கு உடன்பிறப்புகளாம் உங்களை அழைப்பதில் நான் அகம் மிக மகிழ்கிறேன்.  

2024 மக்களவைத் தோ்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூா் முப்பெரும் விழாவுக்கு அனைவரும் திரண்டு வருக. நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திடச் சூளுரைக்கும் விழாவாக வேலூா் முப்பெரும் விழா அமையட்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com