சென்னை: அம்பேத்கர், வள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுப்படுத்தி பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசியிருந்தார்.
அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிக்க | 10-ல் 8 பெண்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்ள விருப்பம்!
இந்த நிலையில், ஆர்.பி.வி.எஸ். மணியனை சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை அதிகாலை சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.