
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருக்குவளை: நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி, 4 செல்போன்களை திருடிச்சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்கள்
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சில நாள்களே கடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்கள்
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரது பைபர் படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க | அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி அதிவேக படகில் புகுந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும் படுகாயமடைந்த தமிழக மீனவர்கள்.
அப்போது மீனவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தமிழக மீனவர்களின் படகில் பாய்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர், கத்தி முனையில் தமிழக மீனவர்களின் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி, 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்திய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...