பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் நாளை (ஏப். 9) ஈடுபடவுள்ளாா். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப். 9) மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார்.
இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.
* பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள்.
* மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
* CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
* வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்.
* CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.