தலைவாசல் அருகே அமைச்சர் உதயநிதி பங்கேற்ற திமுக பிரசார கூட்டத்திற்கு மினி சரக்கு வேனில் சென்ற போது நேரிட்ட விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையம் பகுதியில் இருந்து, கெங்கவல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து பங்கேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது மினி சரக்கு வேனில் 30க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
அப்போது நாவலூர் ஏரிக்கரை சாலை வளைவில் மினி சரக்கு வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த அனைவரும் ஏரியில் விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காமக்கா பாளையத்தைச்சேர்ந்த மருதை மகன் தயாநிதி (29) முத்துக்கருப்பன் மகன் செல்லதுரை (50) ஆகிய இருவரும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து வீரகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர் . மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த
ஓட்டுநர் ராஜதுரை, தனலட்சுமி, தேன்மொழி, சோலைமுத்து அரவிந்த் குமார், ஆசைத்தம்பி சின்னப் பையன், செல்லோ பெருமாள் ஜெயபாலன், ராமசாமி தங்கவேல், சின்னவன் துரை, வையாபுரி யாசினி, செல்லப்பன், ராமசாமி சீனிவாசன், தங்கவேல் உள்ளிட்ட 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.