தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கு திமுகதான் காரணம்: சீமான்

ஈரோடு வேட்பாளர் மரு. மு.கார்மேகனை ஆதரித்து சீமார் பிரசாரம் மேற்கொண்டார்.
சீமான்
சீமான்

தமிழ்நாட்டில் பாஜக வளர்வதற்கு திமுகதான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

ஈரோடு வேட்பாளர் மரு. மு. கார்மேகனை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''விவசாயத்தின் நிலையப் பற்றி எந்த அரசியல்வாதியும் பேசமாட்டார்.

பொருள்களை உற்பத்தி செய்பவன், அதன் விலையை தீர்மானிக்க முடிகிறது. ஆனால் விவசாயி தனது உற்பத்தி பொருளுக்கு விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இன்றும் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்கிறேன் என்கிறது திமுக அரசு. விவசாயியை கடன் வாங்க வைத்தது யார்? கல்விக் கடனை ரத்து செய்வதாக உறுதி அளிக்கிறது. மாணவனை கடன் வாங்க வைத்தது யார்? இலவச கல்வியை ஏன் தரவில்லை.

தற்போது ஆட்சி நடத்திய கட்சியால் சாதனையை கூறி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. பாஜக தமிழ்நாட்டில் வளர்வதற்கு திமுகதான் காரணம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பிரதமர் மோடி இத்தனை முறை சென்றதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆதரவு தெரிவிப்பதும் திமுக பாணி.

தமிழ்நாட்டிற்கு வந்தால், ரோடு ஷோ என்ற பெயரில் வாகன அணிவகுப்பை நடத்துகின்றனர். மக்களிடம் இறங்கிப் பேச அவர்களுக்கு தைரியம் உண்டா?

பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். அதிமுக ஆட்சியில் மனு கொடுக்க வந்தவர்களை தூத்துக்குடியில் சுட்டுக் கொன்றனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என ஒரே பொருளாதார கொள்கையைக் கொண்டது பாஜக - காங்கிரஸ். தமிழ்நாட்டில் வடமாநில மக்கள் பலர் வந்து தொழில் தொடங்குகிறார்கள். தமிழர்களில் எத்தனை பேர் சொந்த தொழில் செய்கின்றனர். சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு இன்னும் தொடர்கிறது.

தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்காத கட்சிகளை புறக்கணிப்போம் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com