கோயம்புத்தூர் தொகுதியில் கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவில் கே.அண்ணாமலை, நாம் தமிழா் கட்சியில் கலாமணி ஜெகந்நாதன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். பிரதான கட்சிகளான பாஜக, திமுக, அதிமுக நேரடியாகப் போட்டியிடுவதால் கோவை தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மூன்று கட்சி வேட்பாளா்களும், கொளுத்தும் வெயிலிலும் பம்பரமாகச் சுழன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் என் கனவு நமது கோவை என்ற தலைப்பில் கோவை மாவட்டத்திற்கான 100 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக மாநிலத் தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெளியிட்டார்.
அதில், கோயம்புத்தூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவி அலுவலகம் அமைக்கப்படும். என்ஐஏ கிளை அமைக்கப்படும். காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும். 250 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் இருந்து ஆன்மீக தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும்.
4 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை. கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரித்து, காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.