சேலம் மக்களவைத் தொகுதியில், இருவேறு வாக்குச்சாவடிகளில், வாக்களிக்க வந்த முதியவர் இருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தனர்.
சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவர் ஏற்கனவே இருதய அறுவைசிகிச்சை செய்து தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்கு வந்த மூதாட்டி சின்னபொண்ணு (77) என்பவர் மயங்கிவிழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250 ல் கொண்டயம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னப்பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் மற்றும் மருமகள் சித்ரா ஆகியோருடன் வாக்களிக்க சென்றுள்ளார்.
அப்போது வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்து கைவிரலில் மை வைத்து வாக்களிக்க சென்றபோது மூதாட்டி சின்னப்பொண்ணு தீடிரென வாக்கு மையத்திலேயே மயங்கி விழுந்தார். அங்கு வந்த செந்தாரப்பட்டி அரசு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த தம்மம்பட்டி போலீஸார் மூதாட்டி உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாக்கு சாவடியில் மூதாட்டி சின்னப்பொண்ணு தனது ஜனநாயகக் கடமையாற்ற சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.