சென்னை: ஆவடி அருகே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மருத்துவர மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மகேஷ் என்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில்தான் இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது என்றாலும், இருவரும் கத்தியபோது கூட அருகிலிருப்பவர்களுக்குக் கூட அவர்களது அலறல் சப்தம் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை, காந்தி, 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர் (72), முன்னாள் ராணுவ வீரரான இவர் ஆயுர்வேத சிகிச்சையும் அளித்து வந்தார்.
இவரது மனைவி பிரசன்னா தேவி (62). இவர்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தனர்.
இவர்களது வீட்டுக்கு வழக்கமாக வரும் நோயாளி ஒருவர் வந்துபார்த்தபோதுதான் இவர்கள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவர்களது மகன் ஹரி ஓம் என்பவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து சிவன்நாயர் வீட்டில் கிடந்த கைப்பேசியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையான தம்பதியின் மகன் ஹரிதான், அந்த செல்போன் தங்களது பெற்றோருடையது அல்ல என்று தெரிவித்ததையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது அந்தக் கைப்பேசி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருடையதும், அவர் வளசரவாக்கத்தில் உள்ள கடையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மகேஷ் நடவடிக்கை பற்றி தனது தாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னிடம் கூறியதையும் ஹரி காவல்துறையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவன் நாயரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததும், அடிக்கடி அவரது வீட்டுக்கு அவர் சென்று வந்ததும் இது பிரசன்னாதேவிக்கு பிடிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது. ஒவ்வொரு முறையும் மகேஷ் வீட்டுக்கு வரும்போது, வீட்டுக்குள் வரக்கூடாது என்று பிரசன்னா தேவி திட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதுபோலத்தான் மகேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலையும் வீட்டுக்குள் நுழைந்ததாவும், சில பொருள்களைக் கொள்ளையடிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்க முயன்ற பிரசன்னாதேவியைக் கத்தியால் கழுத்தை அறுத்து மகேஷ் கொலை செய்துள்ளார். சப்தம் கேட்டு ஓடி வந்த சிவன் நாயரையும் கழுத்தை அறுத்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகேஷ் தப்பிச் சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தான் சிகிச்சைக்கு செல்லும்போதெல்லாம், அவர்கள் மற்ற நோயாளிகள் முன்னிலையில், தன்னை மிக மோசமாக திட்டியதாகவும் அதனால் தான் ஆத்திரத்தில் கொலை செய்ததாகக் கூறியிருப்பதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.