
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளன.
அதேபோல், தமிழக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.