/

சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: “காவல்துறை அலட்சியப்போக்குடன் செயல்பாடு” -இபிஎஸ் கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!

News image
Updated On :8 டிசம்பர் 2024, 3:48 pm

DIN

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த 21 வயது கல்லூரி மாணவி சென்னையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காவல்துறை விசாரணை செய்கின்றனா். குற்றவாளிகளைப் பிடிக்க 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையும் அரசும் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக” அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறை அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாகதாக தகவல்கள் வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.

”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது காவல்துறைக்கு தெரியாதா? பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதுடன், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்” தெரிவித்துள்ளார்.

“இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்துவதாக” தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.