தமிழகத்தில் குழந்தை திருமணம் 56% அதிகரிப்பு!! ஈரோடு, நெல்லையில் அதிகம்!

தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்திருப்பது பற்றி...
சித்திரப் படம்
சித்திரப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை இந்தாண்டில் மட்டும் 55.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்கள் நடந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,640 திருமணங்கள் நடைபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கண்டறிந்துள்ளது.

டாப் மாவட்டங்கள்

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தும் சதவிகிதமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 3,609 புகார்கள் கிடைத்த நிலையில், 70.2 சதவிகித திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், 2023இல் 3,049 புகார்கள் பெற்று 65.4 சதவிகிதமும் 2024இல் 3,544 புகார்கள் பெற்று 53.7 சதவிகிதமும் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. புகார்கள் பெறுவதில் தாமதம் காரணமாக தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு அதிகபட்சமாக 150 குழந்தை திருமணங்களும், நெல்லை மாவட்டத்தில் 133 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு இரு மாவட்டங்களிலும் முறையே 62 மற்றும் 49 குழந்தை திருமணங்கள் பதிவான நிலையில், இந்தாண்டு இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

அதிகளவில் குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ள முதல் 10 மாவட்டங்களில் 6 மேற்கு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஈரோடு தவிர, கோவை 90, நாமக்கல் 74, திருப்பூர் 66, தருமபுரி 58 மற்றும் சேலம் 51.

டாப் 10 இடங்களில் நாமக்கல் இருந்தாலும், 2022 முதல் தொடர்ந்து எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை பெரம்பலூர் 94, திண்டுக்கல் 77 மற்றும் திருப்பத்தூர் 66 உள்ளடக்கிய முதல் 10 மாவட்டங்கள் ஆகும்.

கடந்த ஆண்டைக் காட்டிலும், பெரம்பலூர், திருப்பத்தூர், கோவை, தருமபுரி, திருப்பூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. அரியலூரில் கடந்தாண்டு 2 ஆக இருந்த எண்ணிக்கை இந்தாண்டு 31 ஆக உயர்ந்துள்ளது.

குழந்தை திருமணங்களின் அதிகரிப்புக்கு பொருளாதார அழுத்தம், சாதி ரீதியிலான அழுத்தங்கள், விழிப்புணர்வு குறைவு ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தடுக்கும் நோக்கில் பெண் குழந்தைகள் உயர்க்கல்வியைத் தொடர புதுமைப் பெண் போன்ற திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சூழலில், குழந்தை திருமணம் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com