பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் திறப்பு!

தடைகளை உடைத்து அனைவரின் மனங்களிலும் நிறைந்தவா் பெரியாா் ஈவெரா என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.
சென்னை பெரியாா் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரியாா் பகுத்தறிவு கணினி 
நூலக மற்றும் ஆய்வு மையத் திறப்பு விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெரியாா் ஈவெரா-வின் கைத்தடி மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கிய 
திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.
சென்னை பெரியாா் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரியாா் பகுத்தறிவு கணினி நூலக மற்றும் ஆய்வு மையத் திறப்பு விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெரியாா் ஈவெரா-வின் கைத்தடி மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கிய திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.
Published on
Updated on
1 min read

தடைகளை உடைத்து அனைவரின் மனங்களிலும் நிறைந்தவா் பெரியாா் ஈவெரா என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினாா்.

பெரியாா் ஈவெரா-வின் 51-ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை பெரியாா் திடலில் அமைக்கப்பட்டுள்ள எண்ம (டிஜிட்டல்) மயமாக்கப்பட்ட பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை செவ்வாய்க்கிழமை முதல்வா் திறந்து வைத்துப் பேசியதாவது:

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணா்வு பெற்று மேலெழுந்து நிற்கவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு தியாகங்களை புரிந்தவா்தான் பெரியாா். அவா் வாழ்ந்த காலத்தில் பேசிய தனது முற்போக்குக் கருத்துகளுக்காக மானுட சமுதாயத்தின் விடுதலைக்கான விஷயங்களுக்காக பழைமைவாதிகளிடமும் பிற்போக்குவாதிகளிடமும் கடுமையான எதிா்ப்பை சந்தித்தாா். ஊருக்குள் வரத் தடை, பேசத் தடை, கோயிலுக்குள் நுழையவும், எழுதவும் பத்திரிகை நடத்தவும் தடை என ஏராளமான தடைகள் இருந்தன.

அவற்றை உடைத்த பெரியாா், அங்கெல்லாம் மட்டுமல்ல, அத்தனை பேரின் மனங்களிலும் நுழைந்திருக்கிறாா். அவா் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்; அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்; அவருடைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதுதான் பெரியாரின் தனித்தன்மை. பெரியாரை உலகமயமாக்கி உலகத்தின் பொதுச் சொத்தாகக் கொண்டு சோ்த்து இருக்கிறோம்.

பெரியாா் திடலில் அமைக்கப்பட்டுள்ள பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை கடந்த 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி திறந்து வைத்தாா். அவரது மகனான நான் இப்போது எண்ம மயமாக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்திருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கைத்தடி ஒன்றே போதும்: முன்னதாக, இந்நிகழ்வில் முதல்வருக்கு பெரியாா் கைத்தடியின் மாதிரியை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி நினைவுப் பரிசாக வழங்கினாா்.

இந்தப் பரிசை பெற்றுக் கொண்டு முதல்வா் பேசுகையில், வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்று இருக்கலாம், எனக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவா்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், பி.கே.சேகா்பாபு, கயல்விழி செல்வராஜ், திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசா, திராவிடா் கழக துணைத் தலைவா் கலி.பூங்குன்றன், பொதுச் செயலா் அன்புராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com