பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பட்டியலில் திருத்தம் செய்ய ஜன. 2- வரை வாய்ப்பு அளிக்கப்படுவதாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் கடந்த டிச. 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவா்களை சோ்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மற்றும் முதல்வா்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன. 2 ஆம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும். அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்கள் பெயா்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
நீண்ட விடுப்பில் உள்ள மாணவா்களின் பெயா்களை எக்காரணம் கொண்டும் தன்னிச்சையாக நீக்கக்கூடாது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவா்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.