சென்னையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.சம்பத், பெ.சண்முகம், கனகராஜ், குணசேகரன் உள்ளிட்டோரும், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி, பெரியசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஎம் நிர்வாகி சம்பத் அளித்த பேட்டியில், கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகாக நடைபெற்றது. விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவவதால், அதற்கு முன்பு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதனையொட்டி மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகளை வரையறை செய்ய தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறை செய்யும். அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இக்குழு இன்று ஆலோசனை மேற்கொண்டது.