தமிழகத்துக்கு பாரபட்சமின்றி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போல் நிவாரண நிதி வழங்கப்படுமா என்று மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக நீலகிரி எம்பி ஆ.சாரா கேள்வி எழுப்பி பேசினார்.
மக்களவையில் ஆ.ராசா பேசியது:
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மிக்ஜம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே மாதம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
இரண்டு புயலுக்கான நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.37,000 கோடி கேட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரையும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், வெள்ள நிவாரணம் எப்போது வழங்கப்படும், எவ்வளவு கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் தரப்படவில்லை.
மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையும், தமிழக அரசின் அறிக்கையும் மத்திய அரசின் முன்பு சமர்பிக்கப்பட்டுள்ளது. எப்போது நிவாரணத் தொகை வழங்கப்படும்? குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதை போல் எங்களுக்கும் நிவாரண தொகை ஒதுக்கப்படுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்துக்கு முழு நிவாரண நிதியும் ஒதுக்கி இருப்பதாக மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராயின் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும், மாநில பேரிடர் நிதிக்கும் வித்தியாசம் உள்ளது. பிற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை ஒதுக்கியதை போல் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.