எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க | அரசுத் துறைகள் தொடா்பான குறைகளை மக்கள் தெரிவிக்க பிரத்யேக வலைதளம்
இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 19 பேரையும் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.